சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் விண்வெளி வீரராகவும், ஆக்ஸியம்-4 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவராகவும் அறியப்படுகிறார். சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் பயணித்தார். 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஜூன் 26 அன்று விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

18 நாட்கள், 7 மணி நேரம், 26 நிமிடங்கள் அங்கு தங்கி, பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, கலிபோர்னியா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினார். இந்தப் பயணத்தில், சுபான்ஷு சுக்லா நான்கு பேர் கொண்ட குழுவை வழிநடத்தினார். இந்தக் குழுவில் அமெரிக்காவின் பெக்கி விட்சன் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் அடங்குவர். அவரது தலைமையில், குழு மனித உடலில் விண்வெளி பயணத்தின் தாக்கம், புவி அவதானிப்பு, மற்றும் புதிய தொழில்நுட்பங்களை சோதித்தல் உள்ளிட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இதையும் படிங்க: என் புள்ள பத்திரமா வந்துட்டான்!! கேக் வெட்டி கொண்டாடிய சுபான்ஷு சுக்லா பெற்றோர்!
சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையில் விமானியாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். அவரது விமானப்படை அனுபவமும், தலைமைத்துவத் திறனும் இஸ்ரோவால் விண்வெளி வீரர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஆக்சியம்-4 வரலாற்று திட்டத்தில் கேப்டன் சுபான்ஷு சுக்லா நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது, ஒவ்வோர் இந்தியனுக்கும் ஒரு பெருமையான தருணம்.
அவர் விண்வெளியை தொட்டு விட்டது மட்டுமில்லாமல், இந்தியாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான அவருடைய பயணம் மற்றும் பூமிக்கு திரும்பி வந்தது என்பது, தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி நோக்கங்களுக்கு ஒரு பெருமையான தருணமும் ஆகும். அவருடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக தரையிறங்கினார் சுபான்ஷு சுக்லா!! 22 மணி நேரத்தில் நடந்தது என்ன? இனி காத்திருக்கும் சவால்கள் என்ன?