கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2019-ஆம் ஆண்டு நடந்த புனரமைப்பு பணிகளின் போது ஏற்பட்ட பெரும் தங்கத் திருட்டு வழக்கில் மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவிலின் கருவறை முன்பிருந்த துவாரபாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டபோது, சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. கருவறை கதவுகளில் இருந்தும் தங்கத் தகடுகள் திருடப்பட்டிருந்தது பின்னர் உறுதியானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (டிபிபி) முன்னாள் தலைவர் பத்மகுமார், முன்னாள் ஆணையர் வாசு, நிர்வாக அதிகாரி முராரி பாபு, செயல் அலுவலர் சுதீஷ்குமார், திருவாபரணம் ஆணையர் பைஜூ, உன்னி கிருஷ்ணன் போத்தி, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்!! இறுகும் அமலாக்கத்துறை பிடி! வெளிவருமா உண்மை?!
பெல்லாரி ஜுவல்லரி உரிமையாளர் கோவர்தன், தந்திரி கண்டரரு ராஜீவரரு போன்றோரும் வழக்கில் சிக்கினர்.

கேரளா ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு (நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயக்குமார்) இன்று (பிப்ரவரி 9) இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள், திருடப்பட்டதாகக் கூறப்படும் தங்கத் தகடுகளை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (SIT) உத்தரவிட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த மறு ஆய்வை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்த தேசிய பரிசோதனை மையத்தில் (National Test House) மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.
இந்த உத்தரவு மூலம் தங்கத்தின் தூய்மை, அளவு, தன்மை ஆகியவை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படும். இதன் மூலம் திருட்டு நடந்த விதம், எவ்வளவு தங்கம் உண்மையில் காணாமல் போனது என்பது தெளிவாகத் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை போன்ற புனித தலத்தில் ஏற்பட்ட இந்தத் திருட்டு வழக்கு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஐகோர்ட்டின் இந்த உத்தரவு வழக்கின் போக்கை மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. SIT விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், உண்மை வெளியாகும் வரை பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு! காங்., - கம்யூ மாறி மாறி புகார்! கேரள அரசியலில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!