மகாராஷ்டிராவின் புனே நகரில் ஸ்ரீ பூனா குஜராத்தி பந்து சமாஜ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் கன்வென்ஷன் சென்டர் திறப்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புகழ்ந்து பேசினார். தனது உரையின் நிறைவாக, ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் குஜராத் என பேசி முடித்தார்.
ஏக்நாத் ஷிண்டே ஜெய் குஜராத் என பேசியதை, சிவசேனா உத்தவ் கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்தார். இப்போது ஷிண்டேவின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. ஷிண்டே தலைமையில் இயங்குவது சிவசேனா அல்ல. அது ஷா சேனா என சமூக வலைதலத்தில் கருத்து பதிவிட்டார்.

இதே போல், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் ஷிண்டேவை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். ஷிண்டே குஜராத்தை வாழ்த்துவதின் மூலம் மகாராஷ்டிராவை இழிவுபடுத்திவிட்டதாக கூறினர். இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மாஜி நக்சல்களுக்கு மாஸாக திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்..!
ஏற்கனவே, பள்ளிகளில் மூன்றவாது மொழியாக ஹிந்தியை கற்பிக்க வேண்டும் என, மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அந்த உத்தரவை மாநில அரசு திரும்ப பெற்றது.

இந்தி கட்டாயம் ஆக்கப்படுவதை எதிர்த்த ராஜ்தாக்கரே, மராத்தி மொழியை காக்க, உத்தவ் உடன் இணைந்து செயல்படவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு உத்தவ் தாக்கரேவும் சாதகமாக பதில் கொடுத்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் முதல் முறையாக ஒருங்கிணைந்து மும்மொழி கொள்கைக்கு எதிராக பேரணி நடத்தினர்.
மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தவ் தாக்ரேவின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேடையில் இருவரும் கட்டியணைத்து ஒற்றுமையை வெளிக்காட்டியது தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ராஜ் தாக்ரே பேசும்போது, மகாராஷ்டிராவிட எங்கள் அரசியல் சண்டை ஒன்றும் பெரிதல்ல. 20 ஆண்டுகளுக்கு பின் நாங்கள் இணைந்துள்ளோம். எங்களை ஒருங்கிணைக்கும் வேலையை முதல்வர் பட்னவிஸ் செய்து இருக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களை விட நாம் முன்னணியில் இருக்கிறோம். இருந்தாலும், இந்தி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது?
இந்தி மொழியை எதிர்க்கவில்லை. மராட்டிய பேரரசின்போது, பல மாநிலங்களை ஆட்சி செய்தோம். அந்த பகுதிகளில் நாங்கள் மராத்தியை ஒருபோதும் திணிக்கவில்லை. ஆனால், அவர்களோ எங்கள் மீது இந்தியை திணிக்க தொடங்கி உள்ளனர்.

இங்கு, குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மராத்தி தெரிந்திருக்க வேண்டும். அதற்காக, மராத்தி பேசாவிட்டால் அவர்களை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், யாராவது இந்த விஷயத்தில் தேவையில்லாமல் நாடகம் ஆடினால், அவர்களின் காதுகளுக்கு கீழே அடியுங்கள்.
அதை வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது இல்லை. அடி வாங்கியவரே சொல்லட்டும் என ராஜ் தாக்கரே கூறினார். உத்தவ் தாக்கரே பேசும்போது, நாங்கள் ஒன்றாக இருக்கவே ஒன்றாக வந்து இருக்கிறோம் என்றார். பாஜவை தாக்கி பேசிய அவர், தேவையான அளவுக்கு எங்களை பயன்படுத்தி கொண்டீர்கள். 11 ஆண்டுகால ஆட்சியில் மகாராஷ்டிராவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

மும்பையின் முக்கிய வணிக நிறுவனங்களை குஜராத்துக்கு மாற்றிவிட்டீர்கள். வைர வியாபாரம் ஏற்கனேவே அங்கு போய்விட்டது. மகாராஷ்டிராவின் முதுகெலும்பை உடைத்ததுடன் தொடர்ந்து அதை செய்கிறீர்கள் என உத்தவ் கூறினார்.
தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்து இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் இந்த ஒருங்கிணைப்பு தொடர வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பார்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!