சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய தி.மு.க. அமைத்த 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவில் பெண் உறுப்பினரிடம் ஒரு நிர்வாகி சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டங்களின்போது கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சில இடங்களில் கோஷ்டி மோதலாக மாறியது. முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை என்றாலும், அவரை ஆய்வுக் கூட்டத்துக்கு அழைத்து தந்தையின் செயல்பாடுகள் குறித்து புகார் கேட்கப்பட்டதால் அவர் தவித்துப் போனார். மேலும், கள ஆய்வுக் குழுவில் உள்ள பெண் உறுப்பினரிடம் ஒரு நிர்வாகி தவறான முறையில் நடந்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.
ஆய்வுக் குழுவினர் இளைஞர்களாக இருப்பதால், தங்களுக்கு ஆதரவானவர்களை மட்டும் அழைத்து வேட்பாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தியதாகவும், இதனால் பல இடங்களில் அடிதடி சம்பவங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அறிவாலயத்தில் புகார்கள் அளிக்க வந்தவர்களை சரியாகப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டப்பட்டதாகவும், சில புகார் மனுக்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: இப்பிடி அதிமுகவுக்கு துணை போறீங்களே? நியாயமா? மு.க.ஸ்டாலின்.. உதயநிதி மீது திமுக தொண்டர்கள் அதிருப்தி!

சென்னை மேற்கு மாவட்ட செயலர் சிற்றரசு தனது சொந்த அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தியதால் உண்மையான கருத்துகளை தெரிவிக்க முடியாமல் நிர்வாகிகள் தவித்தனர். திண்டிவனம் தொகுதியில் அடிமட்டத் தொண்டர்களை புறக்கணித்து, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், வாக்காளர்களுக்கு வழங்க வழங்கப்பட்ட ‘கவனிப்பு’ தொகையை சிலர் சுருட்டியதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை ஜூன் 5-ல் இருந்து 10-ம் தேதி வரை நீட்டித்துள்ளது கட்சி. மறுபுறம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளத்தில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். இதுவரை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் 31-ம் தேதி வரை கருத்துகளை பதிவு செய்யலாம் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறியும் நோக்கில் தொடங்கப்பட்ட ஆய்வு, தற்போது உள் பிரச்சினைகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!