தமிழக அரசியலில் சசிகலா அவர்களின் புதிய கட்சி அறிவிப்பு ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அவரது சகோதரர் மகனும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன், சசிகலாவின் அரசியல் நகர்வுகளை மிகக் கடுமையாக எள்ளி நகையாடியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சசிகலாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "திடீர் இட்லி, திடீர் சாம்பார்" என விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், தற்போது சிலர் திடீர் இட்லி, திடீர் சாம்பார் போன்று அவசர அவசரமாகக் கட்சியைத் தொடங்கியுள்ளனர். 99.9% தொண்டர்கள் அமமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளில்தான் உள்ளனர். ஓரணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டது. கடந்த 35 ஆண்டு காலமாக எனக்கு மட்டுமே தெரிந்த சில நபர்களின் உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரிந்துவிட்டது எனத் தனது அத்தை சசிகலாவை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார் தினகரன்.
இதையும் படிங்க: இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!
அம்மாவின் ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்த நினைக்கும் நபர்களை நீங்கள் நெல்மணிகளாக நினைக்கலாம்; ஆனால் அவை வெறும் பதர்களாகக் கூட இருக்கலாம். நெல்மணிகள் நிறைந்த தோட்டத்தில் சிலவற்றைச் சிட்டுக்குருவிகளும், காக்கைகளும் கொத்திச் செல்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என உருவகப்படுத்திப் பேசினார்.
புள்ளி ஒரு சதவீத ஆதரவு கூட இல்லாதவர்களால் அமமுக-வுக்கோ அல்லது அதிமுக-வுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், தொண்டர்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சசிகலா ஒருபுறம் "துரோகிகளை வேரறுப்பேன்" என முழங்க, தினகரன் மறுபுறம் அவரை "பதர்" எனச் சொல்லியிருப்பது, 'மன்னர்குடி' குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு இனிப் பகிரங்கமான அரசியல் மோதலாக உருவெடுக்கும் என்பதைக் காட்டுகிறது.
இதையும் படிங்க: 10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!