சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மக்கள் நீதி மய்யம் (மநீம) திடீரென தேர்தலில் போட்டியிடவே இல்லை என்று அறிவித்துள்ளது. இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமை, மக்கள் நீதி மய்யத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்ததாகவும், அதை உணர்ந்த கமல்ஹாசன் தனது கட்சியை தேர்தல் களத்திலிருந்து விலக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தனது முடிவை “தேர்தலிலேயே போட்டியிடவில்லை” என்று தெளிவாக அறிவித்துவிட்டார்.
இந்த முடிவு குறித்து அரசியல் விமர்சகர்கள் இரு தரப்பு கருத்துகளை முன்வைக்கின்றனர். சிலர் இதை கமலின் தந்திரமான, புத்திசாலித்தனமான நகர்வு என்று பாராட்டுகின்றனர். “திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும், அந்த வெற்றி மநீமவுக்கு பெரிய பலன் தராது. ஓட்டுகள் அனைத்தும் திமுக கணக்கில் சேரும். அதை கமல் தடுத்துவிட்டார்” என்கின்றனர் ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க: டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!
மறுபுறம், எதிர்ப்பாளர்கள் “மதிமுக இதே தவறை செய்து கரைந்து போனது போல, மநீமவும் களத்தை விட்டு விலகினால் மறைந்துவிடும்” என்று எச்சரிக்கின்றனர்.

இந்த முடிவால் திமுகவுக்கு எதிர்பாராத லாபம் கிடைத்துள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்க இருந்த 2 தொகுதிகள் இப்போது திமுகவுக்கு மிச்சம். ஏற்கெனவே தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், விசிகவுக்கு 8 தொகுதிகளும் கொடுத்துவிட்டு தொகுதி பங்கீட்டில் திணறிக் கொண்டிருந்த திமுக, கமலின் இந்த முடிவால் இரண்டு தொகுதிகளை கூடுதலாகப் பெற்றுள்ளது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. “மூன்று கட்ட பேச்சு வார்த்தை, விருப்பத் தொகுதி பட்டியல், முந்தைய தேர்தல் ஓட்டு விவரம் என எல்லாம் கேட்ட பிறகு இறுதியில் இப்படி ஒரு முடிவா?” என்று புலம்புகின்றனர் சிலர்.
முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை “தியாகம்” என்று பாராட்டியுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் “தியாகமா? தந்திரமா? காலம் தான் சொல்லும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் தனது கட்சியைத் தேர்தல் களத்திலிருந்து விலக்கியதால், தமிழக அரசியல் சமன்பாடு மீண்டும் மாறியுள்ளது. உதயசூரியன் சின்னம் இனி திமுக கூட்டணியில் மட்டுமே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் குறித்து அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. கமலின் இந்த “பெரிய ட்விஸ்ட்” தமிழக தேர்தல் களத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!