மா விற்பனை செய்வதைப் பொறுக்க முடியாமல் போராட்டம் நடத்துவதாகக் கிளம்பியுள்ளது தேவையற்ற ஒன்று என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனை காக்க திராவிட மாடல் அரசு 2021 மே மாதம் பொறுப்பேற்ற பிறகு, முதல்-அமைச்சரால் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையும், வேளாண்மைத் துறை என்பதை வேளாண்மை – உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, எண்ணிலடங்காத திட்டங்களின் மூலம் விவசாயிகளின் நலன் காக்கப்பட்டு வருகிறது. முந்தைய அ.தி.மு.க. அரசானது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தது போன்ற பல்வேறு உழவர் விரோத நடவடிக்கையினால் அப்போது விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது விவசாயிகள் அனைவரும் எந்தவித போராட்டமுமின்றி மகிழ்ச்சியில் உள்ள நிலையினை பொறுக்கமுடியாத ஆதங்கத்தில் "அன்றாட அறிக்கை திலகம்" எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாட்டு மக்களை தினந்தோறும் குழப்பி வருகிறார்.

அன்றாடம் அறிக்கைப் போர் நடத்தும் எதிர்கட்சித் தலைவர் இன்றைய தினம் மா விவசாயிகளின் மீது அக்கறை உள்ளது போல் நடித்து அறிக்கை விட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிக அளவு பயிரிடப்படும் பழப்பயிரான "மா" கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி போன்ற மாவட்டங்களின் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இவற்றில் பெங்களூரா, பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம், செந்தூரா, அல்போன்சா, ருமானி போன்ற ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. நடப்பாண்டில், பருவநிலை மா உற்பத்திக்கு பெரிதும் உகந்ததாக அமைந்ததால் சராசரி மகசூலான ஹெக்டருக்கு 5 முதல் 6 டன் என்பது எட்டு டன்னுக்கும் மேலாக அதிகரித்து, சந்தையில் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், மாம்பழக்கூழ் உற்பத்திக்கென்றே பெருமளவு பயன்படுத்தப்படும் பெங்களூரா ரக மாம்பழம் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்த சூழல் நிலவியதாக அறிய வந்த உடனேயே கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான விலையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!

இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், கொள்முதல் செய்யப்படாத நிலையில், மாநில அளவில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் 16.06.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை நியாயமான விலையில் உடனடியாக உழவர்களிடமிருந்து "மா" பதப்படுத்தும் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆவன செய்வதாகத் தெரிவித்து மாம்பழக்கூழ் உற்பத்தி தற்போது ஆரம்பிக்கப்பட்டு அனைத்து மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களும் பெங்களூரா ரக மாங்கனிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

விவசாயிகளும் தங்களது மாங்கனிகளை இந்நிறுவனங்களிடம் மாம்பழக்கூழ் தயாரிக்க உரிய விலையில் அளித்து வருகின்றனர். மாங்கனிக்கான விலையும் படிப்படியாக கூடிய விரைவில் அதிகரிக்கும். மாங்கனிகள் கொள்முதல் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெறும். எனவே, "மா" விவசாயிகளுக்கு லாபம் கிடைத்திட இவ்வரசு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. "மா" தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இப்பிரச்சனையைப் பெரிதாக்கி அரசியல் செய்ய முயற்சித்த எதிர்க்கட்சிகள், அரசின் முயற்சியால் விவசாயிகள் "மா" விற்பனை செய்வதைப் பொறுக்க முடியாமல் போராட்டம் நடத்துவதாகக் கிளம்பியுள்ளது தேவையற்ற ஒன்று. எனவே, தமிழ்நாட்டு மக்களின் கவனச்சிதறல்கள் ஏதுமில்லாமல் திராவிட மாடல் அரசுக்கு நாள்தோறும் விவசாயிகளின் ஆதரவு பெருகி வருவது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்ததே என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எங்கள் வரலாற்றை மறைப்பதற்கு நீ யார்? திமுக எம்.பி திருச்சி சிவா காட்டம்!!