திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் வழக்கம்போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது. இவர்கள் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர்.
கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், டீக்கடை முன் இருந்தவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் என்ற உள்ளூர் நபர், மற்றொருவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி, கணேசன், சசிகுமார் போன்றோர் அடங்குவர். இந்த சம்பவம் நடந்த உடனேயே நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் திருநெல்வேலி மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மார்ச் 3-ஆம் தேதி மாலைக்குள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன், அந்தோணி மைக்கேல் ராஜ், உச்சிமகாளி, வசந்தகுமார், சுப்பையா என்ற சுபாஷ், கல்யாணி, இசக்கிராஜா என்ற பிடி ராஜா. இவர்கள் நாங்குநேரி, நெடுங்குளம், வள்ளியூர், தென்னிமலை போன்ற அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவர். எஞ்சிய 2 பேரை தேடும் பணி தொடர்கிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!
இந்த நிலையில், பயங்கர தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மற்றொரு நபரும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நெல்சன் என்பவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய இரட்டைக் கொலை...! 6 பேரிடம் தீவிர விசாரணை..!!