தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை 69-இல் இருந்து 170-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் 8,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், 4,000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
உயர்கல்வியால் தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர்கல்வியே. இப்படிப்பட்ட உயர்கல்வி உன்னத நிலையை அடைய வேண்டும் என்றால் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும். கட்டமைப்பு வசதிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத அவல நிலை நிலவுகிறது.
இதையும் படிங்க: உங்க துருப்பிடித்து போன இரும்புக் கரத்தை ரிப்பேர் பண்ணுங்க.. முதல்வர் ஸ்டாலினை நயினார் பங்கம்!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டும் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்களில் 30 சதவீத பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர்களை அரசு உயர் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த 30 சதவீத பணியிடங்களை நிரப்பும்போது 10% பணியிடங்கள் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை கொண்டும், 10% பணியிடங்கள் தொழில் வல்லுனர்களை கொண்டும், 10% பணியிடங்கள் வெளிநாட்டு பேராசிரியர்களை கொண்டும் நிரப்ப வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதிலிருந்து பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. 50 சதவீதத்திற்கு மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால் அங்கு தரமான கல்வியை எப்படி அளிக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுதுகிறது.

இது ஒரு புறம் என்றால் மறுபுறம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. முதுநிலை பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்று அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களாக வேண்டும் என்ற கனவில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் திமுக அரசின் இந்த முடிவால் சிதைந்து போயிருக்கிறது.
மொத்தத்தில் உயர்கல்வியிலும் அக்கறை இல்லாத, இளைஞர்களின் எதிர்காலத்திலும் அக்கறை இல்லாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. திமுக அரசின் மக்கள் விரோத செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக உடனுக்குடன் நிரப்பி அதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு முன்பே பாலம் சேதம்.. ஊழல் குறித்து விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்..!