பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு பக்குவமோ தலைமை பண்போ இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

இன்று பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களையும் ராமதாஸ் நீக்கி வருகிறார். முதலில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளரான திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிய மறுகணமே, பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா பாமக பொருளாளராக நீடிக்கிறார், அவருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புமணி அறிவித்தார். இப்படி அப்பா, மகன் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், பாமகவில் அன்புமணியின் கை தான் ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஐயா ராமதாஸ் எவ்வளவு காயப்பட்டு இருப்பார்? பாமகவுல நடக்குறத பார்த்த பாவமா இருக்கு! சீமான் வேதனை..!

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக முன்னாள் MLA சக்தி கமலாம்பாள், நேற்று ஐயா பேட்டி அளித்ததில் இருந்து, அனைத்து ஊடகங்களும் எங்கள் சின்னய்யாவை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் பொய்யாக பேசுகிறார்கள். நான் ஏறக்குறையாக 45 வருடங்களாக மகளிர் அணி தலைவராக இருந்துள்ளேன். வன்னியர் சங்கத்திலிருந்து, கட்சி தொடங்கியதிலிருந்து இருக்கும் முதல் பெண்மணி நான்தான். அன்றிலிருந்து இப்போது வரை அவர்களுடன் தான் பயணித்து வருகிறேன். இப்போது திடீரென பெரியய்யா ராமதாஸ், நிர்பந்தத்தின் காரணமாகவும், சூழ்நிலை கைதியாக யாரோ சொல்லிக் கொடுத்ததை, எழுதிக் கொடுத்ததை சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் நிச்சயமாக தன் மகனை அவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்று அடித்துக் கூறினார்.

அதே போல் அன்புமணி தனது தாயை பாட்டிலால் அடித்தார் என்பதை அனைத்து ஊடகங்களும் தலைப்பு செய்தியாக போட்டு பேசுகிறீர்களே.. இது நன்றாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், நான் அவர்களின் சொந்தக்காரி, அவர்களுடன் நீண்ட நாட்களாக இருக்கிறேன். சத்தியமாக சொல்கிறேன் வெள்ளிக்கிழமை அதுவுமாக சொல்கிறேன், ஐயா ராமதாஸ் அப்படி செய்யவில்லை, ஊடகங்கள் ஐயாவைப் பற்றி தவறாக சொல்கிறீர்கள், அனைத்து ஊடகங்களும் சின்னையாவை தாழ்த்தியும் பெரியய்யாவை உயர்த்தியும் பின்னர் சின்னையாவை உயர்த்தியும் பெரியய்யாவை தாழ்த்தியும் மாற்றி மாற்றி சொல்கிறீர்கள், நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது, அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த குடும்பப் பிரச்சனையை வெல்லமாக பேசுகிறீர்கள், இது சர்க்கரை மாதிரி இனிக்குது. நான் சத்தியமாக சொல்கிறேன் அவர் அதை பேசவில்லை என்று சக்தி கமலாம்பாள் கூறினார்.
இதையும் படிங்க: என் அம்மா தான் எனக்கு எல்லாம்.. அவ்ளோ பிடிக்கும்.. தந்தையின் குற்றச்சாட்டிற்கு அன்புமணி மறுப்பு..!