பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு பக்குவமோ தலைமை பண்போ இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து இன்று முதல் சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அன்புமணி முடிவெடுத்தார். இதுகுறித்த செய்தி மாலையிலேயே வெளியான நிலையில், நேற்றிரவு அவசர அவசரமாக பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

அதில் கட்சியின் கௌரவ தலைவர் ஜி. கே மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற கழக மாநில தலைவர் சிவபிரகாசம், வன்னியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பரந்தாமன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக்க தலைவர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்து அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 25 பேரை பதவியிலிருந்து நீக்கி புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: உடைகிறதா பாமக? - நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அன்புமணி... பாமக முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு...!
தற்போது பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களையும் ராமதாஸ் நீக்கி வருகிறார். முதலில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளரான திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிய மறுகணமே, பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமக பாமக பொருளாளராக நீடிக்கிறார், அவருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புமணி அறிவித்தார். இப்படி அப்பா, மகன் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், பாமகவில் அன்புமணியின் கை தான் ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் நாளான இன்று அன்புமணி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 23 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கு காரணம் அன்புமணி தான் பாமகவின் அடுத்த எதிர்காலம் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஸ்ட்ராங்காக நம்புவதே எனக்கூறப்படுகிறது. இதேசமயம் கடந்த வாரம் ராமதாஸ் பாமகவில் உள்ள அணிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய போது மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பங்கேற்றனர்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூட இதைக் குறிப்பிட்ட ராமதாஸ், அன்புமணி தான் மாவட்ட செயலாளர்களுக்கு போன் செய்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என சொல்லியிருக்கிறார் என குற்றச்சாட்டினார். அப்படி பார்த்தால் கூட அன்புமணி சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு மாவட்ட செயலாளர்கள் பின்வாங்கி இருப்பதும் பாமகவில் அவருக்கு ஆதரவையேக் காட்டுகிறது.
இதையும் படிங்க: அன்புமணி கூசாமல் பொய் சொல்வார்... ராமதாஸ் கருத்தால் பாமக-வில் பரபரப்பு!!