சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் அனைவரும், மயிலம், தருமபுரி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அன்புமணிக்கு, தலைவர் பதவி கொடுக்கிறேன் என சொன்னேன்.

ஆனால் மைக்கை வீசி அடிப்பது, தாய் மீது பாட்டிலால் அடிப்பது உள்ளிட்ட அன்புமணியின் செயல்பாடுகளை ப பார்க்கும் போது எனது மூச்சு காற்று இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன். எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த பொறுப்பிற்கும், அரசியலுக்கும் வரக் கூடாது என்று கட்சி ஆரம்பிக்கும் போது நான் சொன்னேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது.
இதையும் படிங்க: உயிரோடு இருக்கும் வரை நானே பாமக தலைவர்... ராமதாஸ் திட்டவட்டம்!

கட்சி நிர்வாகிகள் சொன்னதால் 35 வயதில் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தேன். உலக அளவில் அன்புமணி விருது வாங்கினார். தற்போது தந்தையிடம் விருது வாங்க முடியாமல் இருக்கிறார். தந்தை, தாயை மதிக்க வேண்டும். அதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. தனி ஒரு நபராக 96 ஆயிரம் கிராமங்களுக்கு இரவு, பகலாக சென்று நான் பட்ட பாடு சொல்லி மாளாது.

"100 ஆண்டுகள் இருப்பீங்க" என சொல்லிவிட்டு மார்பிலும் முதுகிலும் அன்புமணி ஈட்டியால் என்னை குத்திவிட்டு இருக்கிறார். இதனால் தூக்க மாத்திரை போட்டாலும் எனக்கு தூக்கம் வருவதில்லை. அன்புமணியை நினைக்கும் போது வலி ஏற்படுகிறது. ஆனால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அது பாசத்தால் அல்ல, பாசமெல்லாம் எனக்கு போய்விட்டது. அவருக்கு ஒரே தீர்வு, செயல் தலைவராகவே இருக்கிறேன். ஐயா சொல்வதை கேட்கிறேன் என கூறுவதுதான் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாமின்னு நெனச்சோம்.. கல்லுனு புரிஞ்சிக்கிட்டோம்! ராமதாசை தாக்கும் அன்புமணி ஆதரவாளர்கள்!