தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள இதே வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் தலைமை மாற்றக் கோரி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. தொடர் தேர்தல் தோல்விகளால் விரக்தியடைந்த முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தன்னைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி, செல்லூர் ராஜு, தம்பிதுரை மற்றும் தனபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அதிமுகவின் மொத்தம் உள்ள 82 மாவட்டச் செயலாளர்களில் வெறும் 17 பேர் மட்டுமே எடப்பாடி இல்லத்திற்கு வந்தனர். மேலும், வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ-க்களில் 15 பேர் மட்டுமே அவருடன் உள்ளனர். இது எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சரிந்துள்ளதைக் காட்டுகிறது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?
மறுபுறம், எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் ஓரணியில் திரண்டுள்ளனர்: அதிமுகவின் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களும், எஞ்சிய 32 சட்டமன்ற உறுப்பினர்களும் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்புக்கே தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
உங்களால் கட்சித் தொடர் தோல்விகளைச் சந்தித்து, இன்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்துவிட்டோம். எனவே, உடனடியாகப் பதவியை விட்டு விலகி, கட்சியை மீட்டெடுக்க வழிவிடுங்கள்" என்பதே இவர்களின் ஒற்றை முழக்கமாக உள்ளது. கட்சி முழுமையாகப் பிளவுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் தூதுவர்களாகக் களமிறங்கியுள்ளனர்:
இரு தரப்பையும் நேரில் சந்தித்துப் பேசி வரும் இவர்கள், சமாதான உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், கட்சிக்குள் நிலவும் இந்தத் தலைமைப் போட்டி, அவையில் யார் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தல் தோல்வி அதிமுகவின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வாரா அல்லது வேலுமணி-சண்முகம் கூட்டணி புதிய தலைமையைப் பிரகடனம் செய்யுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி பழனிசாமி.. அடுத்த 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க அறிவுறுத்தல்!