தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஈஸ்வரனின் கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் இருக்கின்றன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக தான் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. கூடுதலாக ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் இருக்கிறது. அந்த கட்சி கூட்டணிக்கு பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, ஜான்பாண்டியனின் மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் வரலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாமக, தேமுதிகவை தன் அணிக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தால் தான் மெகா கூட்டணியாக இருக்கும் என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த விதமும் நேரமும் சரியில்லை என பெரும்பாலான விமர்சகர்கள் சொன்னார்கள். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் போது எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அழைத்து சென்றது போல் இருக்கிறதே, என பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அமித்ஷா கூட்டணி ஆட்சி என சொன்னது குறித்து எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அமித்ஷா அப்படி சொல்லவில்லை என சொன்னார். ஆனால் எடப்பாடி என்ன சொல்லியிருக்க வேண்டும் என்றால், அமித்ஷா சொன்னால் சொல்லட்டும். எங்களை பொருத்தமட்டில் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான், கூட்டணி ஆட்சி எல்லாம் சரிவராது என சொல்லியிருந்தால் இந்த பிரச்சினைக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
இதையும் படிங்க: நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை அமித்ஷா இன்று வரை சொல்லவில்லை. 4 நாட்களுக்கு முன்புதான் நயினார் நாகேந்திரன் சொல்லியிருக்கிறார். இனியாவது எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு காரணத்திற்காக அமைதியாகவே இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல. தொடர்ந்து பாஜக இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் எப்படி வேலை செய்வார்கள். அதிமுக இல்லாமல் பாஜகவால் ஒரு தொகுதியிலாவது ஜெயிக்க முடியுமா? அதிமுக உதவியுடன்தான் ஜெயிக்க முடியும் என பாஜகவுக்கு நன்றாக தெரிந்திருந்தும் அவர்களை சீண்டி பார்க்கும்படியான வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல.

அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் 3 இல் ஒரு பங்கு இடத்தை பாஜக கேட்கிறது. அந்த அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா? அண்ணாமலை தனது தொண்டர்களை உற்சாகப்படுத்த எந்த கருத்தை கூறினாலும் அதை புறந்தள்ள முடியாது. ஏனென்றால் அவர் செல்வாக்குமிக்க தலைவர். அவருடைய அரசியல் எதிரிகள் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். கூட்டணி உடைவது குறித்து கவலைப்பட வேண்டியது அமித்ஷாதான். பாமக, தேமுதிகவை சமாதானம் செய்து தன் அணிக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மெகா கூட்டணியாகவும் வெற்றி கூட்டணியாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரை மேற்கில் சூரியன் மறையும்... மறைமுகமாக திமுகவை தாக்கிய செல்லூர் ராஜூ!!