தமிழக அரசின் மீன்வளம், மீன்பிடித் துறை அமைச்சரும் தி.மு.க. மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
2001-2006ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டில் 2019இல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு 2025இல் அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்தது.
அதையடுத்து, அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கையும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: அரசியலுக்கு முழுக்கு போடும் அனிதா ராதாகிருஷ்னன்?! திருச்செந்தூரில் களம் இறங்கும் கனிமொழி?! திடீர் ட்விஸ்ட்!

ஆனால் தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் இரு தரப்புக்கும் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனால் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக இனி என்ன நடக்கும் என்பதை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். வழக்கு முடிவுக்கு வரும் வரை இது தமிழக அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!