தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தவெக அமைச்சரான கீர்த்தனாவை சுற்றிய சம்பவம் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான கீர்த்தனா, நேற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றிருந்தார்.
ஆனால் இன்று சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்கும் நேரத்தில், தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை கொண்டு வர மறந்ததால் ஆரம்பத்தில் பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தின் 17வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தபோது, முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர். அந்த நேரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் அழைக்கப்பட்டபோது, தேவையான வெற்றிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் அவர் உடனடியாக பதவியேற்க முடியவில்லை.
இதையும் படிங்க: ஆரம்பமே இப்படியா?... சட்டமன்றத்தில் பதவியேற்காத கீர்த்தனா... எம்.எல்.ஏ. சான்றிதழை மறந்து விட்டு வந்ததால் பரபரப்பு...

இந்த சம்பவம் சட்டசபையில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அமைச்சராக ஏற்கனவே பதவியேற்ற ஒருவர், எம்எல்ஏ பதவியேற்புக்கு தேவையான முக்கிய ஆவணத்தை மறந்துவந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து பல்வேறு கருத்துகள் வெளியானது.
பின்னர் கீர்த்தனாவின் உதவியாளர் மூலம் வெற்றிச் சான்றிதழ் அவசரமாக சட்டசபைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அவையில் அழைக்கப்பட்ட கீர்த்தனா, தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏவாக உறுதிமொழி ஏற்று பதவியேற்றார். இதன் மூலம் ஏற்பட்ட குழப்பத்திற்கு முடிவு கிடைத்தது.
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால், அரசியல் வட்டாரங்களில் இது அதிக கவனம் பெற்றுள்ளது. “அமைச்சராக பதவியேற்ற பிறகும் முக்கிய ஆவணத்தை மறந்துவந்தது எப்படி?” என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதே நேரத்தில், இறுதியில் சான்றிதழ் கொண்டு வரப்பட்டதால் சட்டரீதியான சிக்கல் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடவுள் அறிய உறுதி!! உளமாற உறுதி! ரூட்டை மாற்றிய விஜய்! தமிழக சட்டசபை தேர்தலில் சுவாராஸ்ய பதவியேற்பு!