தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சட்டசபை சபாநாயகர் தேர்தலுக்கான தவெக வேட்பாளரை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். நாளை (மே 12) நடைபெற உள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை முன்னிட்டு, ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரை சபாநாயகர் பதவிக்காக நிறுத்த தவெக முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தவெக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்தது. அதன் பின்னர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். நேற்று நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நாளை நடைபெறும் சபாநாயகர் தேர்தல் அரசியல் வட்டாரங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவில் நீண்டகாலம் முக்கிய தலைவராக இருந்த ஜேசிடி பிரபாகரை சபாநாயகர் வேட்பாளராக நிறுத்துவது அரசியல் ரீதியாக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பதவியேற்பதை தவிர்க்கிறார்களா அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?! இதுவரை 7 பேர் பதவியேற்கவில்லை! உட்கட்சி பூசல் காரணமா?

அதிமுக பின்னணியைக் கொண்டுள்ள ஜேசிடி பிரபாகருக்கு, அதிமுகவின் சில எம்எல்ஏக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து வரும் சில அதிமுக உறுப்பினர்கள் இந்த தேர்தலில் தவெக தரப்புக்கு மறைமுக ஆதரவு அளிக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த முடிவு, சபாநாயகர் தேர்தலை வெறும் நடைமுறை தேர்தலாக அல்லாமல், அரசியல் பலப்பரீட்சையாக மாற்றியுள்ளது. புதிய அரசின் அதிகார சமநிலையையும், எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வுகளையும் இந்த தேர்தல் தீர்மானிக்கக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சட்டசபை சபாநாயகர் தேர்தலை முன்னிட்டு சென்னை அரசியல் வட்டாரம் முழுவதும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தவெக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் வெற்றி பெற்றால், அது விஜய் அரசின் முதல் பெரிய அரசியல் வெற்றியாக பார்க்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!