தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரைப்பத்தியில் ஆகஸ்ட் 21ம் தேதியான நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்புமுனையாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கருத்தில் கொண்டு காவல்துறை பரிந்துரையின் பேரில் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரைப்பத்தியில் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கப்படுகிறது. சுமார் 20 முதல் 50 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ வசதிகளுக்காக 400 மருத்துவ குழுக்கள், தனி ஆம்புலன்ஸ் பாதை, குடிநீர், சுகாதாரம், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை தயாராகி வருகின்றன. மேலும், ட்ரோன் மூலம் மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: 2வது மாநாட்டிற்கு ரெடியாகும் தவெக.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கட்சி தலைமை..!!
கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநாடு பெரும் கவனம் பெற்றது. அங்கு திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்தார். இந்த மாநாட்டில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், தேர்தல் உத்திகள் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து தெளிவான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கு 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. மாநாட்டு பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாகவும், முதல் மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதற்கு விரிவான திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இந்த மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 98 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விஜய் மதுரைக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கடந்த மாநாட்டை போலவே பிரம்மாண்ட மேடை, மேடையில் இருந்து மாநாட்டு திடலில் இறுதி பகுதி வரை ராம்ப் வாக் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி தவெக மாநாட்டில் பங்குபெறும் தொண்டர்களுக்கு சித்திரை திருவிழாவில் வழங்குவது போல் தவெக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் விசிறி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் தவெக மாநாட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், அண்ணாவின் புகைப்படங்கள் மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ளன. கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி வந்த விஜய், தற்போது திமுக, அதிமுக தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநாட்டு முகப்பின் ஓரத்தில் கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் மிகச் சிறிய அளவில் இடம் பெற்றிருக்கின்றன. இதன்மூலம் புதிய அரசியல் நகர்வை விஜய் செய்து வருகிறார் என கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: பிரம்மாண்டமாக நடைபெறப்போகும் தவெக மாநில மாநாடு.. ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிப்பு..!!