அரியானூர் பகுதியில் இன்று நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. இந்த விபத்திற்கு தமிழகப் போக்குவரத்துத் துறையின் மெத்தனப் போக்கே காரணம் என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், விடியா திமுக அரசில் போக்குவரத்துத் துறை டப்பா பேருந்துகளை இயக்கி வருகிறது. பழைய பேருந்துகளுக்குப் புதிய பேருந்துகள் போல் பெயிண்டை மட்டும் மாற்றிவிட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்காமல் பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது கண்டிக்கத்தக்கது, என்று பதிவிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கோவிலுக்குத் துரோகம் செய்கிறீர்கள்.. அறநிலையத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் சமீபகாலமாக அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும், பழுதடைந்து பாதையில் நிற்பதும் தொடர்கதையாகி வருகிறது. பழைய பேருந்துகளைப் புதுப்பிக்காமல் வெறும் மேல்பூச்சு (Paint) வேலைகளை மட்டும் செய்துவிட்டு இயக்குவது பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த 7 பேர் பலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் பேருந்துகளைத் தகுந்த ஆய்வுக்குப் பின்னரே இயக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த புதுச்சேரி கூட்டணி இழுபறி! ரங்கசாமி சம்மதத்தால் என்.டி.ஏ-வில் இணைந்தது ல.ஜ.க!