தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இழுபறி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக அணி தனது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகமாக முடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான NDA அணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் இன்னும் முழுமையடையாமல் தாமதமாகி வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. முதன்மையான இழுபறி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிலவி வந்தது.
இதற்கிடையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக சென்றிருந்தார். தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த அழைப்பை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் டெல்லி சென்றனர். அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி பேசி முடித்ததாக கூறப்படும் நிலையில் இன்று கையெழுத்தாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்றனர். அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கூடினர். இந்த நிலையில் அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: "FLASH BACK"... 9 வருடங்களுக்கு பிறகு அதிமுக அலுவலகத்தில் கால் வைத்த TTV தினகரன்..!!
இதேபோல் NDA கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு?... இன்றே கையெழுத்தாகிறது ஒப்பந்தம்...!