சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024 ஆம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கைது செய்தனர். பின்னர், கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, சென்னை சைதாப்பேட்டை 9 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 7ம் தேதி மாற்றப்பட்டது. இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கம்.. பாஜகவுக்கு பெரிய இழப்பு.. பெங்களூரு புகழேந்தி சொல்லும் காரணங்கள்.!!

வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வந்தன. பாதிக்கப்பட்ட மாணவி உட்பட மொத்தமாக 29 சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டன. அதேபோல் சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் என 100 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதன்பின் நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்புக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வார்த்தையை விட்ட அண்ணாமலை... நாவை அடக்கச் சொன்ன அமித் ஷா...!