அதிமுகவில் தொடர்ந்து நிலவும் உள்கட்சி முரண்பாடுகளுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மற்றும் செயல்பாட்டை நேரடியாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது கட்சிக்குள் புதிய விவாதங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜயபாஸ்கர் தனது பதிவில் கூறியுள்ளதாவது: “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’ வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்.” இந்த வார்த்தைகள் தெளிவாக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை குறிவைத்து எழுதப்பட்டவை என அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.

இந்தப் பதிவின் பின்னணியில் அதிமுகவின் சமீபத்திய நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசுக்கு சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சில அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் விவகாரம் பெரும் பூசலுக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. பின்னர் தகுதி நீக்க மனுக்கள் வாபஸ் பெறப்பட்டாலும், உள்கட்சி அதிருப்தி தொடர்கிறது.
இதையும் படிங்க: மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!
பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து உரையாடிய நிலையில், விஜயபாஸ்கர் மட்டும் இதுவரை அவரை நேரில் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனது தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து வரும் அவர், கட்சியில் தொடர்வது குறித்த இறுதி முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பதிவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!