உலக நாயகன், ஆண்டவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் கமல்ஹாசன். 230க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், நடனம், பாடகர் என பல அவதாரங்களில் கலக்கியுள்ளார். இப்போதும் பிஸியான ஹீரோவாக நடித்து வரும் கமல், கடைசியாக தக் லைஃப் படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த மற்றும் இயக்கிய திரைப்படங்கள் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளன. அவரது முக்கியமான படங்களில் நாயகன், தேவர் மகன், விஸ்வரூபம், மற்றும் ஹே ராம் ஆகியவை அடங்கும்.

சினிமாவில் உச்சத்திற்கு சென்றுகொண்டிருந்த இவர், திடீரென அரசியலில் களமிறங்கி, 2018 இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதன்மூலம் தமிழ்நாட்டில் அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது பன்முகத் திறமைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் அவரை இந்திய திரையுலகில் ஒரு முக்கிய ஆளுமையாக ஆக்கியுள்ளன.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!
இந்நிலையில் ஆஸ்கார் விருது பெறும் படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கார் விருதுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதனை பிரபல தொகுப்பாளர் கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனைப் போன்று உலகம் முழுவதும் 534 புதிய திரைக்கலைஞர்களுக்கு ஆஸ்கார் படங்களைத் தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கமல்ஹாசனுடன் நடிகர் ஆயுஷ்மான் குரானா, படத் தயாரிப்பாளர் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கும் ஆஸ்கார் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால் அவர்கள் ஆஸ்கார் நாமினேஷன் படங்களைத் தேர்வு செய்வார்கள், மேலும் வெற்றியாளர்களையும் இந்தக் குழு தேர்வு செய்யும். 2022ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு இதேபோன்ற அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு கிடைத்த இந்த உயரிய கௌரவத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்! மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி. என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!