தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமை மூன்று இடங்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அக்கட்சியின் சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகிய மூன்று பேரை வேட்பாளராக அறிவித்திருந்தது. மேலும் கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், மே 28 ஆம் தேதி கூடி அதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது.
இதையும் படிங்க: விஜய் சொல்வது வடிகட்டுன பொய்.. யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கையை வெளியிடுகிறார்.. அதிரடி கிளப்பும் சேகர்பாபு..!
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மாநிலங்களவை தேர்தலில் ம.நீ.ம.வுக்கு இடம் ஒதுக்கியதற்காக ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார். பதிலுக்கு ஸ்டாலின் அவரை வாழ்த்து கூறினார்.

அதன் பின்னர், அண்ணா அறிவாலய வளாகத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். மாநிலங்களவையில் தான் என்னுடைய குரல் முதல்முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துதான் வருகிறேன் என அவர் கூறினார். திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை; அதனால் இங்கு வந்துள்ளேன் என்று கமல்ஹாசன் பதிலளித்தார்.
இந்த நிலையில் தான் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் செல்வதற்கு நடிகர் கமலஹாசன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தக் லைஃப் திரைப்படம் நன்றாக இருக்கும் என நம்பி தான் உங்கள் முன் எடுத்து வந்துள்ளோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது மக்களுக்கு பிடிக்கும் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அதனால் சந்தோஷமாக இருக்கிறோம்.

சென்னையில் இருந்து மலேசியா சென்று அங்கிருந்து துபாய் செல்கிறோம் அங்கு புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது அதன்பின் படம் வெளியாகும் போது இங்கு வந்து விடுவேன் என கமலஹாசன் தெரிவித்தார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளீர்கள் என்பது குறித்து கேட்டபோது, நமது குரல் அங்கே ஒலிக்க வேண்டும்! மையத்தின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும்!
பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்கும் என்றும் கமலஹாசன் சொன்னார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமலஹாசன், நானும் புதிய கட்சிதான்! புது கட்சிகளை விமர்சனம் செய்யக் கூடாது என கூறி புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: பச்சை பொய், சுய தம்பட்டம்.. செயல் திறன் அற்ற அவல ஆட்சி.. முதலமைச்சரை வறுத்தெடுத்த விஜய்..