அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23-ஆம் தேதியன்று, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி அளித்த புகாரின் பேரில், செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியதில் டிசம்பர் 25-ஆம் தேதி, 37 வயதாகும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு மே 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அதிரடி தீர்ப்பை வழங்கினார். குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்துள்ள நிலையில் தற்போது நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது;
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு, தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மனமுவந்து வரவேற்கிறேன்.
பெண்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளவோ சமரசம் செய்துகொள்ளவோ முடியாது. அத்தகைய குற்றங்களுக்கு அஞ்சும் வகையிலான தண்டனை தரப்படும் என்னும் நம்பிக்கையை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமல் IN, வைகோ Out.. மாநிலங்களவை எம்.பி சீட்டில் திமுக விளையாடும் உள்ளே, வெளியே கேம்..