தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த முதலமைச்சர் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன? எந்தெந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த மாதம் 10ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக வெளிநாட்டுப் பயணமாக கடந்த 10ஆம் தேதி சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
முதலமைச்சரின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பது உள்ளிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: “பெரியார் விதைத்த சமூகநீதி விதைகள்...” - லண்டனில் இருந்து வந்த மறுநொடியே சி.எம். விஜய் பரபர ட்வீட்...!
அதன் அடிப்படையில், இந்த மாதம் 14ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.12,300 கோடி அளவிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டு கையெழுத்தாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் வாகன உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் உபகரணங்கள், குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவையாகும்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான தகவலில், தமிழ்நாடு அரசின் மொத்த அறிவிப்பின்படி விருப்பக் கடிதங்களையும் சேர்த்து, கிட்டத்தட்ட ரூ.15,300 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகள் இந்தப் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சந்திப்புகளின் மூலம் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குமான நடவடிக்கைகளில் இந்த வெளிநாட்டுப் பயணம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி 110 விதியின் கீழ் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள ரேஸ் கண்ட்ரோல் மற்றும் ரேஸ் சர்க்யூட் பகுதிகளைப் பார்வையிட்டார்.
சர்வதேச அளவிலான நீண்ட தூர கார் பந்தயங்களை நடத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாடுகள், ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவர் கேட்டறிந்ததுடன், சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சில்வர்ஸ்டோன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத் திடலில் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர் அஜித்குமார் பங்கேற்ற மோட்டார் கார் பந்தயமான 2026 மிச்செலின் லீமாஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்ததும் அவருடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். முதலமைச்சரும் ரேசிங் உடையில் அங்கு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர், ரூ.15,300 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING ஒன் வீக் லண்டன் ட்ரிப் ஓவர்... சென்னை திரும்பினார் சி.எம்.விஜய்... ரூ.15,300 கோடி முதலீடுகளை கொத்தாய் அள்ளி கெத்து...!