சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், அதிகாலை நேரங்களில் பல மாவட்டங்களில் பனிமூட்டம் அல்லது மிதமான மூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது. இது சாலை போக்குவரத்து மற்றும் காலை நேர அன்றாட நடவடிக்கைகளை சற்று பாதிக்கக்கூடும்.

இன்று (பிப்ரவரி 9) முதல் 11-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை தொடரும். வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, நீலகிரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். இதனால் பார்வைத் திறன் குறைவதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 12 மற்றும் 13-ஆம் தேதிகளிலும் வறண்ட வானிலை நீடிக்கும். இதேபோல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் தொடரும்.
சென்னை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் லேசான மூட்டம் காணப்படலாம். 14 மற்றும் 15-ஆம் தேதிகளிலும் இதே வறண்ட நிலை நிலவும் என மையம் தெரிவித்துள்ளது. மழை அல்லது கனமழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், இன்று முதல் 13-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல்நேர வெயில் சற்று அதிகமாக உணரப்படும்.
குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும்.

நாளை (பிப்ரவரி 10) காலை வேளையில் வானம் தெளிவாக இருக்கும். பின்னர் ஓரளவு மேகமூட்டம் ஏற்படும். அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உண்டு. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் அருகிலும் பதிவாகும்.
இந்த வானிலை நிலவரம் காரணமாக, காலை நேரங்களில் பயணம் செய்பவர்கள் மெதுவாக வாகனம் ஓட்டி, மூட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டும். வெப்பநிலை உயர்வால் நீரிழிவு, மூத்தவர்கள் உள்ளிட்டோர் தண்ணீர் அதிகம் அருந்தி உடல்நலத்தைப் பேண வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!