கடலூர் அருகே வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான சசிகுமார். சசிகுமாரும் அவரது நண்பர் ராஜாவும் பெரிய காட்டுப்பாளையம் அடுத்த ரங்கா ரெட்டிபாளையம் பகுதியில் காரை கழுவிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், இருவரையும் நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன.
இதையும் படிங்க: "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!
வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் மற்றும் ராஜா இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது வீசப்பட்ட மற்றொரு வெடிகுண்டு வெடிக்காமல் கீழே விழுந்த நிலையில், இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடியுள்ளனர்.
சசிகுமார் வயல்வெளி வழியாகத் தப்பி ஓடியபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற அந்தக் கும்பல், அவரது கழுத்து மற்றும் தலைப்பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சசிகுமாரின் நண்பர் ராஜாவும், கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சசிகுமாருக்கும் ராஜாவுக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
இதனிடையே, தப்பி ஓடிய ராஜாவை தவளக்குப்பம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவரை ரெட்டிச்சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், சாலையோரமாக கீரைகளுடன் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மற்றும் வெடிக்காமல் கிடந்த மற்றொரு வெடிகுண்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!