தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திருச்சி வந்த அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசின் நிர்வாகத் திறமை மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து அவர் முன்வைத்தக் கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வைக் கூடச் சரியான முறையில் நடத்த முடியாத ஒரு நிர்வாகத் திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட, சட்டம் ஒழுங்கு டிஜிபியை இதுவரை நியமிக்க முடியாத நிலையில் இந்த அரசு இருக்கிறது. இது இவர்களதுத் திறமையின்மையையேக் காட்டுகிறது என அவர் சாடினார்.
மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் குற்றம் சாட்டுவது குறித்துப் பேசிய அவர், "மத்திய அரசு திட்டங்களைத்தான் கொடுக்க முடியும். மாநில அரசு சரியான முறையில் அணுகாததால்தான் பல திட்டங்கள் தமிழகத்திற்கு வரவில்லை. குறிப்பாக, மெட்ரோ ரயில் திட்டத்திற்குச் சரியான திட்ட அறிக்கையை (DPR) அனுப்பாத காரணத்தால்தான் அந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது திமுக அரசின் அலட்சியமே தவிர வேறில்லை" என்றார்.
இதையும் படிங்க: விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்புச் செய்ததே சாட்சி. இதைக் குறித்து நீதிமன்றமே தனதுத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. கட்சி ஆரம்பித்தப் பின் அவர் மக்கள் மத்தியில் வருவதில்லை. குறிப்பாகக் கரூர் சம்பவத்திற்குப் பிறகு 72 நாட்கள் அவர் வெளியே வரவில்லை; எந்த அரசியல் தலைவரும் இப்படி இருக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
"இந்தியா கூட்டணியின் பெயரைச் சொல்லவே முதலமைச்சர் தற்போது அஞ்சுகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே உட்கட்சிப் பூசல் வெடித்திருப்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது எங்களதுக் கூட்டணி முழுமை பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக முதலமைச்சர் அறிவித்துள்ள புதியத் திட்டத்தைக் 'குழந்தைக்கு மிட்டாய் கொடுக்கும் செயல்' என்று விமர்சித்த அவர், "திமுக தனதுத் தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக் கூட நிறைவேற்றவில்லை" எனக் குற்றம் சாட்டினார். தவெக-வில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்துக் கேட்டதற்கு, "அவர் ஒரு செல்லாத நோட்டு, அவரைப் பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை" என ஒரே வரியில் பதிலளித்தார்.
இதையும் படிங்க: “தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!