தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் உத்திகளை வலுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையாகத் தொடங்காத நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வியூக பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
இந்தக் கூட்டம் அதிமுகவின் தேர்தல் தயாரிப்புகளை மேலும் துல்லியமாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்பான முன்னேற்றங்கள், கூட்டணி கட்சிகளுடனான உறவுகள், தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர். சமீபத்தில் அதிமுக ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து, 4 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டுக் குழுவை அமைத்த எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி ஆகியோரை அதில் இடம்பெறச் செய்துள்ளார். இந்தக் குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெயிலியர் ஆன தங்கத் தமிழ்ச்செல்வன்... ஓபிஎஸை தோற்கடிக்க புது பார்முலாவை கையில் எடுத்த இபிஎஸ்...!
ஆனால், பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடிப்பதால், பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையடையவில்லை. கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் சோளிங்கர் தொகுதியை குறிவைத்து கேட்பதால் யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கிட்டை சுமுகமான முறையில் முடிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!