முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் இன்று நடைபெற்ற அனைத்துப் பெரியார் பூர்வீக பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்க ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள கர்னல் பென்னிகுக் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத் தலைவர் விஜயராஜன், ஒருபோக விவசாய சங்கத் தலைவர் முருகன் மற்றும் இருபோக விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பூர்வீக பாசன விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை 122-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு பேபி அணையைப் பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து, அணையின் நீர்மட்டத்தை அதன் முழு கொள்ளளவான 152 அடியாக உயர்த்த வேண்டும்.

வைகை அணையில் சுமார் 22 அடி உயரத்திற்கு மேலாகக் கழிவு மண் தேங்கியுள்ளதால், நீரைத் தேக்க முடியாமல் உபரி நீர் வீணாகிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் வைகை அணையைத் தூர்வார வேண்டும். முல்லைப் பெரியாறு முதல் கடைமடைப் பகுதி வரை நடைபெறும் சட்டவிரோத நீர் திருட்டினைத் தடுக்கத் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: பிஜேபி - அதிமுக கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு.... நாமக்கல்லில் சிபிஎம் சண்முகம் அதிரடி பேட்டி!
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் (Three Phase) இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
இந்தத் தீர்மானங்கள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கத் தலைவர் முருகன், எங்களது நியாயமான 10 கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட தீவிரப் போராட்டங்களில் ஈடுபடுவோம், என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் வேண்டி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம்! மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் அதிரடி!