தமிழக அரசின் சார்பில் காவிரி நீர் பங்கீட்டுக்காக கடந்த மூன்று மாதங்களில் எந்தக் கோரிக்கையும் கர்நாடகத்திடம் விடுக்கப்படவில்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி வெளியான பின்னர், தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.காவிரி நதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த நதியை நம்பி சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது.
ஆனால், இந்த ஆண்டு உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக்கப்படாமல் உள்ளது. இதனால் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஒரு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

குறிப்பாக, வறட்சிக் காலமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம் 42.98 டி.எம்.சி. நீர் (மே மாதம் 2.5 டி.எம்.சி., ஜூன் 9.19 டி.எம்.சி., ஜூலை 31.24 டி.எம்.சி.) திறந்துவிட வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்துக்கு விடுவிக்கப்படவில்லை. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இது குறித்து கூறுகையில், “அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பது பழமொழி. ஆனால், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆணையத் தீர்ப்பின்படி நமக்குரிய பங்கீட்டைப் பெற விஜய் அரசு போதிய அழுத்தம் கொடுத்தாலே போதும். இருப்பினும், தமிழக அரசின் சார்பில் எந்தக் கோரிக்கையும் வரவில்லை என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.மேலும், “எட்டு கோடி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.
இதையும் படிங்க: தவெக அரசை எச்சரித்த இபிஎஸ்! காவிரி நீரை உடனே வாங்கலனா அறமே எமனாக மாறித் தண்டிக்கும்!
ஆனால், காங்கிரசின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தக்க வைக்கும் பொருட்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் கர்நாடகத்திடம் தாரைவார்ப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.“மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்கள். ஆனால், விஜய் அவர்கள் ஆட்சியைத் தக்க வைக்க எட்டு கோடி மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டார் என்று தோன்றுகிறது. இது ஏற்புடையதல்ல. தமிழக மக்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்” என்றும் கிருஷ்ணசாமி சாடினார்.இறுதியாக, “தமிழகத்திற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான உரிய நீரைப் பெற முதல்வர் விஜய் உரத்த குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடகத்துக்கு நேரடியாக அனுப்பி, தமிழகத்தின் பங்கீட்டை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!