அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் தங்களது மூன்றாவது குழந்தைப்பேற்றின் போதும் சம்பளத்துடன் கூடிய முழு மகப்பேறு விடுப்பைப் பெறுவதற்கு வழிவகை செய்துள்ள தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முற்போக்கு முடிவுக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இத்தகைய நீண்ட விடுப்புகளால் அரசுத் துறைகளில் எழும் தற்காலிகப் பணியிடப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு உரிமைகள் மற்றும் அதுதொடர்பான விதிமுறைகள் குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைப்பேற்றுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் அரசின் சமூக நல நடவடிக்கையைக் குறிப்பிட்ட நீதிபதிகள், "திருமணம் மற்றும் குழந்தைப்பேறு காரணங்களால் பெண் ஊழியர்கள் தங்களது அரசுப் பணிகளைத் துறந்துவிடாமல், அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதை உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த மனிதநேய முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது" என்று வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

அதேசமயம், நிர்வாகச் சீரமைப்பைக் கருத்தில் கொண்டு முக்கிய வழிகாட்டுதலைப் பதிவு செய்த நீதிபதிகள், "மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, பல்வேறு அரசுத் துறைகளில் தற்காலிகமாகக் காலிப் பணியிடங்கள் உருவாகி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படவோ அல்லது சுணக்கம் அடையவோ வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய காலிப் பணியிடங்களால் பொதுமக்களுக்கான சேவைகளில் எழும் தேவைகளைத் தங்குதடையின்றிச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு எத்தகைய மாற்றுத் திட்டங்களை வகுத்துள்ளது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது" என்று சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை: அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே உத்தரவிடும் - மதுரை ஐகோர்ட்!
இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ள பெண் அரசு ஊழியர்களால் ஒவ்வொரு அரசுத் துறையிலும் நிலவும் தற்காலிகக் காலிப் பணியிடங்களின் துல்லியமான எண்ணிக்கை விவரங்கள் என்ன, அந்தப் பணிகளை தொய்வின்றி நடத்த அரசு எடுத்துள்ள மாற்று நடவடிக்கைகள் யாவை என்பது குறித்த முழுமையான புள்ளிவிவர அறிக்கையை நீதிமன்றத்தில் முறைப்படி சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!