மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் இன்று பக்திப் பரவசத்துடன் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது.
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைதிருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும், நேற்றிரவு திக்கு விஜயமும் நடைபெறகிறது.
பின்னர் சித்திரை திருவிழாவின் 10 நாள் விழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் நடைபெற்றது. வண்ண மலர்களாலும், நறுமணத் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருக்கோயில் மண்டபத்தில், அன்னை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இனிதே அரங்கேறியது.
இதையும் படிங்க: மதுரை குலுங்க குலுங்க...களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!
மதுரையின் அரசியான மீனாட்சி அம்மனுக்குப் பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு, வைரக் கற்கள் பதித்த திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட அந்தப் புனிதமான தருணத்தில், அங்கிருந்த ஒட்டுமொத்த பக்தர் கூட்டமும் "மீனாட்சி... சொக்கநாதா..." என்ற முழக்கத்துடன் தங்கள் கரகோஷங்களை எழுப்பினர். இந்த தெய்வீகத் திருமணத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் திரண்டுள்ள நிலையில், திருக்கல்யாணம் முடிந்தவுடன் மங்கல நாண் மாற்றிக் கொள்ளும் வழக்கப்படி பெண் பக்தர்கள் அனைவரும் புதிய தாலிச் சரடை மாற்றிக் கொண்டு தங்களின் மாங்கல்ய பலம் பெருக வேண்டிக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் வெளி வீதி முழுவதிலும் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய செல்வதற்காக முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வை காண்பதற்கு 500 ரூபாய் கட்டண ரசீது பெற்ற 2500 பக்தர்கள் காலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் வடக்கு ராஜகோபுரம் வழியாகவும், 200 ரூபாய் கட்டண ரசீது பெற்ற 3500 பக்தர்கள் வடக்கு – கிழக்கு சித்திரை வீதி அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கட்டணமில்லாமல் தரிசிக்க வரும் 3ஆயிரம் பக்தர்கள் முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட என மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் வளாகத்தை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக வெயிலின் தாக்கம் இருப்பதால் திருக்கல்யாணம் நடைபெறும் உள்ளே 200 டன் தற்காலிக ஏசி பொறுத்தப்பட்டுள்ளது. திருக்கல்யாண மேடை முழுவதும் 2 டன் அளவிற்கான பல்வேறு வகையான பூக்களை வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1.5லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறவுள்ளது.
இதேபோன்று இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்தும் நடைபெற்ற நிலையில் இந்த விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள். மேலும் இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக செலுத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் மீனாட்சி - சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணத்தில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!