கடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்துவிட்டு, தன்னை எதிர்த்து நின்ற கட்சியிலேயே இணைந்து தேர்தலைத் திணித்துள்ள மரகதம் குமரவேலின் செயலால் நடக்கும் இந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ள மாவீரன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக மாவட்டச் செயலாளர்களான தா.மோ. அன்பரசன், க. சுந்தர் ஆகியோர் முன்னிலையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் பரந்தாமன், தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் சே.கு. தமிழரசன், மல்லை சத்யா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் க. செல்வம், தரணிவேந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட ஏராளமான திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: 10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ.வேலு Vs சி.வி.சண்முகம்.. அனல் பறக்கும் வார்த்தை போர்!

நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, இடைத்தேர்தல் களம் குறித்து அனல் பறக்கப் பேசினார். அப்போது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நின்ற மரகதம் குமரவேலுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிராகவே அவர் இன்று செயல்பட்டு வருகிறார். அவரை எதிர்த்து அரசியல் செய்த தவெகவில் திடீரெனப் போய்ச் சேர்ந்துவிட்டு, சுயநலத்திற்காக இன்று அதே மக்களிடம் வந்து வாக்குக் கேட்கிறார்.
இந்த மதுராந்தகம் இடைத்தேர்தல் என்பதே ஒரு ஜனநாயகப் படுகொலையாகும். ஆனால் கள நிலவரம் திமுகவிற்கு முற்றிலும் சாதகமாக மாறியுள்ளது; கிராமங்கள்தோறும் படித்த பட்டதாரி இளைஞர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு திமுக வேட்பாளர் பரந்தாமனுக்குப் பேராதரவு அளித்து வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
அதேவேளையில், தொகுதிக்குள் நுழையும் தவெக வேட்பாளரைச் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆவேசத்துடன் விரட்டியடித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தான், தற்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டிய பரிதாப நிலைக்குத் தவெக வேட்பாளர் தள்ளப்பட்டுள்ளார் என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: “ரீல்.. ரீல்” என சைகை காட்டிய எ.வ.வேலு.. சிரித்த முதல்வர் விஜய்! சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய தருணம்!!