தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தின் கல்வி உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் போக்கை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் இந்த துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிப்பதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26இல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் ஆர்டிஇ திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்து பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகின்றன என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் பிரதமரா? இன்னும் ரசிகர் மன்ற Mode-ல்தான் இருக்கிறார்கள்! தவெக அமைச்சர்களை கிண்டல் செய்த மாணிக்கம் தாகூர்
மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, பிஎம்-ஷ்ரீ மற்றும் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மாணிக்கம் தாகூர். இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கோரிய அவர், எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “பாஜகவின் பொம்மலாட்ட பொம்மை...” - அன்புமணி ராமதாஸை சீண்டிய மாணிக்கம் தாகூர்...!