தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார் என்றும், மக்கள் தலையில் பொருளாதாரச் சுமைகளைச் சுமத்துவது யார் என்றும் கேள்வி எழுப்பிய அவர், இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் விலை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். 2024 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் சூரியகாந்தி எண்ணெய் கிலோ ஒன்றுக்கு ₹115.71-லிருந்து ₹193.58 ஆக 67.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

மல்லி (தனியா) கிலோ ₹23.82-லிருந்து ₹46.11 ஆக 93.6 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்க்கரை கிலோ ₹44.28-லிருந்து ₹53.58 ஆக 21 சதவீதமும், அரிசி கிலோ ₹55.75-லிருந்து ₹60.25 ஆக 8.1 சதவீதமும் உயர்ந்துள்ளன. உப்பு விலை 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.அதேவேளையில் துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை என வேல்முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!
ஆனால் எளிய மக்களுக்கு ஒரு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.வெளிச்சந்தை விலை உயர்வுக்குக் காரணங்களை அடுக்கித் தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஏற்கனவே உள்ள விலை நிலைப்படுத்தும் நிதியை ஒன்றிய அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் தமிழ்நாடு அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கேரளாவில் மலைகள் இல்லையா.? தமிழ்நாட்டு கனிம வளத்தை அழிக்கத் தான் ஆட்சிக்கு வந்தீங்களா.? கொந்தளித்த வேல்முருகன்.!!