தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் க. செங்கோட்டையன் சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, மலைப்பகுதி மாவட்டங்களான நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள தயார் நிலை குறித்து அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு அமைச்சரும் தினசரி அடிப்படையில் தங்களது துறை சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். “முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையின்படி, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுத்தும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறினார்.
தற்போது அந்தமானில் ஒரு வாரமாக தொடர்ச்சியான மழை பெய்து வரும் நிலையில், கேரளாவிலும் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் எதிரொலிக்கக் கூடும் என்பதால், அங்கு மழை அளவை துல்லியமாக கண்காணிக்க நாள்தோறும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களில் நிறுவப்பட்டுள்ள ரேடார் கருவிகள் மூலம் 24 மணி நேரமும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக அரசு துறைகள், தன்னார்வ சமூக அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: "திமுக - அதிமுக ரகசியக் கூட்டணியை உடைக்கவே எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தனர்!": அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி !

மத்திய அரசும் தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க உறுதியளித்துள்ளது. தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், மழையின் தீவிரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.
மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் மின்சாரத் துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளதால், ஜூன் 4ஆம் தேதி பள்ளிகளை திறக்க எந்தத் தடையும் இல்லை என்று அமைச்சர் அறிவித்தார். வெயில் தாக்கம் 41 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெயில் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதன் காரணமாகவே ஜூன் 1ஆம் தேதி திட்டமிடப்பட்ட பள்ளி திறப்பு 4ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
நிலச்சரிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் வழக்கம் உண்டு. ஆனால் வயநாட்டில் ஏற்பட்டதுபோல் தமிழ்நாட்டில் நடைபெறாது. அங்கு புதிதாக நிலங்கள் வாங்கி இயற்கையை பாதித்த வகையில் கட்டுமானங்கள் எழுந்தன. முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் இயற்கைக்கு எதிரான எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது” என்று உறுதியளித்தார். மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்த கேள்விக்கு, அது உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கேட்க வேண்டிய விஷயம் என்று அமைச்சர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!