கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு இளைஞர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த நிலையில், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில், புகார் அளிக்க வந்த ஒரு நபர் காவல் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள குற்றப்பிரிவு உதவி ஆய்வாளரின் அறைக்கு சென்று, அங்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. மறுநாள் காலை காவல் நிலையத்தில் பணிக்கு வந்த காவலர்கள், இந்த நபரின் உடல் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காவல் நிலையத்திற்கு வருபவர்கள் காவு வாங்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதோடு பலத்த சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!
ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்த தமிழகக் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்திற்கு பல அப்பாவிகள் பலியாகியுள்ள நிலையில், ஆளும் அரசின் மீதோ அதன் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சட்டம் ஒழுங்கின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை என்று கூறினார்.
எந்தக் கட்டுக்கதைகளைக் கேட்கவும் மக்கள் தயாராக இல்லை என்றும் திறனற்ற திமுக ஆட்சியில் அதிகார மதம் பிடித்த அதிகாரிகளின் கையில் தமிழகம் சிக்குண்டுள்ளதை மக்கள் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

புகாரளிக்க வந்த நபர் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் இருந்தது எப்படி யாருக்கும் தெரியாமல் போனது என்றும் புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா எனவும் எந்தக் காவலர்களும் அதை கவனிக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், முக்கியமாக புகாரளிக்க வந்தவரிடம் அவரது முழு விலாசத்தையும் பெறுவது தானே முறை, அப்படியிருக்கையில் இறந்தவர் யாரென்றே தெரியவில்லை எனக் காவல்துறை கூறுவது எதை மூடி மறைப்பதற்காக என்றும் யாரென்றே தெரியாத ஒருவருக்கு உதவி ஆய்வாளர் அறை வரை எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
காலை பத்து மணி வரை சுத்தம் செய்வதற்காகக் கூட யாரும் உதவி ஆய்வாளரின் அறை பக்கம் ஒதுங்கவில்லையா என்றும் கேட்டுள்ளார். விசாரணை என்ற பெயரில் அவரும் அடித்துக் கொல்லப்பட்டாரா போன்ற அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டியது அவரது கடமை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இல்லையேல் கட்டப்பஞ்சாயத்து காவல்துறைக்கு எதிராகவும் இந்த அராஜக ஆட்சி ஒழியவும் மக்கள் போராட்டங்களை தமிழக பாஜக முன்னெடுக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுல காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல! முதல்வரை நார் நாராக கிழித்த நயினார்..!