நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்.
இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு பச்சைக்கொடி காட்டியதாக கருதப்படுகிறது.இந்த வேட்பாளர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், முனைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது, தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், இன்று முதல் திருத்தணி தொகுதியில் இருந்து சீமான் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இது 234 தொகுதிகளுக்கும் விரிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து சீமான் வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் தேர்தல் களம்..! திருத்தணி முருகனை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கும் சீமான்..!!
இந்த முறையும் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கும் சீமான் சோளிங்கர், ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக காலை வர சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து திருத்தணி முருகன் கோவிலில் வழிபட்டார். பச்சை நிற துண்டை தலையில் கட்டி சக்தி வேலுடன் திருத்தணி முருகன் கோவில் படிகளை ஏறி சீமான் கோவிலுக்கு சென்றார். அங்கு பிரச்சாரம் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றும் திருத்தணி முருகனை வேண்டி வழிபாடு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: "பனைத் தொழிலாளர்களை தாக்கி பொய் வழக்கு"..! சீமான் கடும் கண்டனம்..!