நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து, அவர்களின் 4 படகுகலையும் பறித்துள்ளது, வன்மையான கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுவதும், தாக்கப்படுவதும், உடைமைகள் பறிக்கப்படுவதும் என சிங்கள கடற்படையின் இனவெறி கொடுமைகள் தொடர்வது இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுவதாக தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொள்வது ஏன் என்று கேட்டுள்ளார். வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்து பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

 ஆளும் பாஜக அரசிற்கு குஜராத், மராத்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன் என்றும் காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கிள்ளி குடுக்க உங்க அப்பா வீட்டு பணமா ஸ்டாலின்? ஊக்கத் தொகையை உயர்த்த ஜெயக்குமார் வலியுறுத்தல்...!
 தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: திடீர் சுறுசுறுப்பாகும் திமுக எம்.எல்.ஏ-க்கள்!! அனல் பறக்கும் ஆன்லைன் விளம்பரம்! பக்கா திட்டம்!