தமிழ்நாட்டின் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போடத் தகுதி பெற்றிருந்த நிலையில், 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த உயர் வாக்கு சதவீதம், தமிழக மக்களின் தீவிர அரசியல் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது.
இன்று காலை 8 மணியிலிருந்து தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், புதிய அரசியல் அமைப்பான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அமோக முன்னிலையில் உள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, த.வெ.க. 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த முடிவுகள் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

த.வெ.க. நிறுவனர் மற்றும் தலைவர் நடிகர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார். இது அவரது அரசியல் அறிமுகத்தை வெற்றிகரமாக்கியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் தென்னரசு 1,11,827 வாக்குகளைப் பெற்று, 41,664 வாக்குகள் முன்னிலையுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: வருமான வரி சோதனை..! ஆதாரங்களை வெளியிட்ட செல்வப் பெருந்தகை..!
இதே தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை 70,163 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவினார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பழனி 55,057 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 9,813 வாக்குகளையும் மட்டுமே பெற்றனர்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.வெ.க.வின் வெற்றி, அக்கட்சியின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை, தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகையால் தான் காங்கிரஸை விட்டு விலகினேன் - விஜயதரணி ஆவேசம்!