அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. ராஜினாமாவைத் திரும்பப் பெற அனுமதி கோரியும், வழக்கு முடியும் வரை அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கோரியும் தாக்கல் செய்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, அண்மையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். அவரது ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இசக்கி சுப்பையா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் திடீரென ஒரு புதிய கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "நான் அளித்த ராஜினாமாவைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் எனது அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இடைத்தேர்தல் மற்றும் ராஜினாமா தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, நான் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளேன். ஆகவே, என்னை எம்.எல்.ஏ.வாகச் செயல்பட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!
இந்தக் கூடுதல் மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் ஏற்கனவே முடிவடைந்து இறுதித் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், இத்தகைய கூடுதல் கோரிக்கையை விசாரணைக்கு ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்து நிராகரித்தது.
இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!