கேரளாவின் திருச்சூர் பூரம் (Thrissur Pooram) திருவிழா இந்த ஆண்டு சோகமான சூழலில் நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்த விழாவின் முக்கிய அம்சமான வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருச்சூர் (Thrissur) நகரில் நடைபெறும் இந்த பூரம் திருவிழா, யானைகள் அணிவகுப்பு, குடை மாற்றும் நிகழ்ச்சி மற்றும் இரவில் நடைபெறும் பிரமாண்ட பட்டாசு வெடிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சூர் அருகே முண்டத்திக்கோடு பகுதியில் உள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. விழா நெருங்கிய நேரத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், பக்தர்களையும், கோவில் நிர்வாகத்தினரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சதி! பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு!! உத்திர பிரதேசத்தில் இருவர் கைது!

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்வம் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில், இந்த ஆண்டு Thrissur Pooram திருவிழாவை மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக நடைபெறும் வண்ணக் குடை மாற்றும் நிகழ்ச்சி குறைக்கப்பட்ட அளவில் நடைபெறும். முக்கியமாக, இரவின் அழகை உயர்த்தும் வாணவேடிக்கை நிகழ்ச்சி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், உயிரிழப்புகளை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையில், அதிக அளவில் பட்டாசுகளை சேமித்து வைத்ததாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் பினோய் ஜேக்கப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமேக்காவு தேவஸ்வம் நிர்வாகிகள், விழாவுக்கு தேவையான அளவு வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்டது தான் எனக் கூறியுள்ளனர். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த ஆண்டின் Thrissur Pooram, மகிழ்ச்சியை விட சோகத்தை அதிகம் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!