தமிழ்நாடு அரசு, நீண்ட காலமாக ஒரே அலுவலகம் அல்லது ஒரே பகுதியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த விரிவான தகவல்களை உடனடியாகத் திரட்டும் அவசர நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவும் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்துத் துறை இயக்குநரகங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, குறிப்பாக நிர்வாக அலுவலர் (AO), இளநிலை நிர்வாக அலுவலர் (JAO), அலுவலகக் கண்காணிப்பாளர் (OS) மற்றும் உதவியாளர் போன்ற பதவிகளில் உள்ளவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 23, 2026-க்குள் குறிப்பிட்ட படிவத்தில் முழுப் பணி விவரங்களுடன் அறிக்கை அளிக்க வேண்டும் எனக் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அவசரமானது என்பதால் அனைத்து இயக்குநரகங்களும் விரைந்து தகவல் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதையும் படிங்க: கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.953 கோடி நிதி சுமையை ஏற்று தமிழ்நாடு அரசு அரசாணை!
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பதவி உயர்வு பெற்று வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டபின், நிர்வாகக் காரணங்கள் அல்லது தற்காலிகப் பணி மாற்றம் மூலம் சில நாட்களிலேயே பழைய இடத்திற்கே திரும்பிவிடும் உத்தியையும் அரசு கண்காணித்துள்ளது. அத்தகையவர்களின் பெயர், திரும்பிய தேதி மற்றும் காரணம் ஆகியவற்றையும் அறிக்கையில் கட்டாயம் சேர்க்க வேண்டும் எனத் தெளிவாக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.
ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதால் நிர்வாகத்தில் தேக்க நிலை ஏற்படுகிறது. கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் தொடர்ந்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நெருங்கிய தொடர்பு உருவாகி ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது என லஞ்ச ஒழிப்புத் துறை வழிகாட்டுதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், விரும்பத்தக்க நகரங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களில் குறிப்பிட்ட சிலரே நிரந்தரமாக இருப்பதைத் தடுத்து, பிற ஊழியர்களுக்கும் சம வாய்ப்பு அளிப்பதே இதன் நோக்கம்.

அரசு விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட இருக்கையில் மூன்று ஆண்டுகளும், ஒரு அலுவலகப் பகுதியில் அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளும் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படும். ஆனால் அரசியல் சிபாரிசுகள் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகப் பலர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் நீடித்து வருகின்றனர். இந்தக் கணக்கெடுப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23-க்குள் ஒருங்கிணைந்த அறிக்கை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற பிறகு, விதிமீறல் செய்தவர்கள் கண்டறியப்படுவர். மாற்றுப் பணி மூலம் பழைய இடத்திலேயே நீடிப்பவர்களின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டு, காலிப் பணியிடங்கள் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் தொலைதூர அலுவலகங்களுக்கு உடனடி மாறுதல் உத்தரவிடப்படும்.
இந்த நடவடிக்கை நீண்டகால முகாம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், நிர்வாகத்தை வெளிப்படையாகவும் வேகமாகவும் மாற்ற உதவும் என நேர்மையான ஊழியர்களும் பொதுமக்களும் வரவேற்கின்றனர்.
இதையும் படிங்க: ஹாட்ஸ்பாட் ஆன பட்டினப்பாக்கம்..! புதிய தலைமைச் செயலகம்... நாளை கலந்தாய்வு கூட்டம்.!