தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) இன்று மாலை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் எதிரொலியாக, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர அமைச்சர்களின் புகைப்படங்கள் இன்று மாலை அகற்றப்பட்டன. சில இடங்களில் புகைப்படங்கள் காகிதம் அல்லது துணிகளால் மறைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் ஸ்டாலின் தான் வர்றாரு, மக்களுடன் முதல்வர் போன்ற அரசுத் திட்டங்களை விளக்கும் சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!
பொது இடங்களில் அரசியல் கட்சிகளால் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் மற்றும் கட்சிச் சின்னங்கள் 'வெள்ளை' அடிக்கப்பட்டு (White-washing) மறைக்கப்படுகின்றன. இந்தப் பணிகளை முடிக்கத் தேர்தல் ஆணையம் 48 மணி நேரக் கெடு விதித்துள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இடம்பெற்றுள்ள முதலமைச்சரின் புகைப்படங்கள் மற்றும் அரசின் சாதனைக் குறிப்புகளும் தேர்தல் விதிகளின்படி நீக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும் 128 பறக்கும் படைகள் இந்தப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் சுவரொட்டிகள் அல்லது விளம்பரங்கள் ஒட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!