தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் வரும் மார்ச் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தவெக தலைவர் விஜய் ஏற்கனவே தனது மாநாடுகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகச் சாதிவாரி கணக்கெடுப்பிற்காகக் குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது களப்போராட்டத்தில் இறங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
வரும் மார்ச் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை), தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.
சென்னையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட போராட்டத்தில் தவெக தலைமை நிலைய நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது கட்சியின் அரசியல் நகர்வுகளில் மிக முக்கியமான போராட்டமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!
"சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனில் சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம்; ஆனால் மாநில அரசு இதனைத் தொடர்ந்து காலதாமதம் செய்து மக்களை ஏமாற்றி வருகிறது" என்பது தவெக-வின் பிரதான குற்றச்சாட்டாகும். பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்களைப் பின்பற்றித் தமிழகத்திலும் உடனடியாக கணக்கெடுப்பைத் தொடங்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சாதிவாரி கணக்கெடுப்பு என்ற மிக முக்கியமான விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராட்டத்தில் இறங்குவது, ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி 'SIR' திருத்தப் பணிகளுக்கு எதிராகத் தவெக போராட்டம் நடத்திய நிலையில், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பிற்காக மீண்டும் களமிறங்கியுள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!