தமிழக அரசியலில் புதிய அத்தியாத்தை தொடங்கியுள்ள விஜய், இன்று முதல் முறையாக தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியாக உருவான தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை தொகுதியான 118 எம்.எல்.ஏ.க்கள் கிடைக்காததால் கடந்த ஒருவாரமாக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120 உறுப்பினர்களின் பலத்தை பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையடுத்து புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING CM நேரடி கண்காணிப்பில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை”... 1 எஸ்பி, 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் நியமனம்...!
17ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 233 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இன்று பதவியேற்கின்றனர். முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியை ராஜிநாமா செய்ததால் 233 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். சட்டமன்றம் தொடங்கியதும் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தற்காலிக சபாநாயகரான சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு செய்து வைக்கவுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சான்றிதழை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
13-ந் தேதிக்குள், அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சட்டசபை எப்போது கூடும் என்பது இன்று தெரியவரும். இதனிடையே முதலமைச்சர் விஜய் முதல் முறையாக இன்று சட்டப்பேரவைக்கு வருகை தரவுள்ளார். 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக திராவிட கட்சிகள் இல்லாத புதிய கட்சியாக உருவெடுத்துள்ள தவெக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி வரிசையிலும் எதிர்க்கட்சி வரிசையில் திமுகவும் அமரவுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்விற்காக முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கான்வாய் மற்றும் உச்சக்கட்ட பாதுகாப்புடன் சட்டமன்றத்திற்கு புறப்பட்டார். இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். முதல் ஆளாக முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ.வுக்கான பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றதும், அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்வார்கள். முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இது மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது. இதனால், முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சட்டமன்ற அமர்வு என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... 60 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதிய சி.எம். விஜய்... எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு...!