இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொவை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து (60), சங்கர பாண்டியன் (50) மற்றும் மாடசாமி ஆகிய மூவர் இந்து சமய அறநிலையத்த துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளிய சாமி கோயிலில் காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் மாடசாமி நேற்று பகலில் வேலை பார்த்ததால் மற்ற இருவரும் இரவு நேரத்தில் காவல் காத்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாடசாமி கோவிலுக்கு வந்த போது பிரதான கதவின் சிறிய கதவு திறந்திருந்தது. அருகே இருந்த உண்டியல் சேதமாகி இருந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் மாடசாமி தகவல் கூறியுள்ளார். அவரது தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.

உண்டியல் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனது. தகவல் அறிந்து இறந்த இருவரது உறவினர்களும் கோவில் முன் திரண்டதால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்கள் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து தாக்கும் போதை ஆசாமிகள்... போலீஸ் கண்டுக்கல?.. மறியலில் குதித்த மக்கள்...!
இந்த நிலையில், இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட SP கண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். ராஜபாளையம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தடையங்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு... ஆம்ஸ்ட்ராங் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல்...!