ஐபிஎல் 2025 தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடந்து வரும் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. 10 அணிகள் இடையிலான 18வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி முதலாவதாக அகமதாபாத்தில் நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, நான்கு தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிட்ட இந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் டாப் 2 இடத்திற்குள் இருப்பதை உறுதி செய்துவிடும். மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது. 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்த மூன்று அணிகள்.. ஓரிடத்துக்கு மல்லுக்கட்டும் இரண்டு அணிகள்!!

அகமதாபாத்தில் இன்று நடந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 34 ரன்களும், டெவோன் கான்வே 52 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். சிவம் துபே 17 ரன்களில் அவுட்டானாலும், உர்வில் படேல் 37 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

அதன் பின்னர் களமிறங்கிய டெவால்ட் ப்ரீவிஸ் 19 பந்துகளில் அரைசதம் எட்டி, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டாவது அதிவேக அரைசதம் அடித்த அஜிங்க்யா ரஹானே மற்றும் மொயீன் அலியின் சாதனையை சமன் செய்தார். 19 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரெவிஸ் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4வது வீரராக இணைந்துள்ளார். டெவால்ட் ப்ரீவிஸ் மொத்தமாக 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்கிற்கு 21 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. தனது இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடி காட்டியது.

இதனையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களத்தில் இறங்கியது. முதலில் சுப்மன் கில் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் களமிறங்கினர். சுப்மன் கில் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 5 ரன்களும், ரூதர் போர்டு ரன் ஏதும் எடுக்காமலும், ஷாருக்கான் 19 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்த சாய் சுதர்ஷன் 41 (28) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து ரஷித் கான் 12 ரன்களும், கோட்சி 5 ரன்களும், ராகுல் தெவாட்டியா 14 ரன்களும், அர்ஷத் கான் 20 ரன்களும், சாய் கிஷோர் 3 ரன்னும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். முடிவில் முகமது சிராஜ் 3 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், கலில் அகமது மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. எனினும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துடன் இந்த சீசனை நிறைவு செய்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இதையும் படிங்க: இலக்கை எட்ட தடுமாறிய SRH... பேட்டிங், பீல்டிங் என இரண்டிலும் கலக்கிய GT வெற்றி!!